Advertisement

“டெல்லியில் போராடத் தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு அனுமதி வழக்குக” – உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்!

காவிரி மற்றும் மேகதாது விவகாரத்தில் நீதிக்காகத் நாட்டின் தலைநகர் புதுடெல்லி நோக்கிப் போராட்டம் நடத்தச் சென்ற தமிழ்நாட்டு விவசாயிகளை மகாராஷ்டிர மாநிலக் காவல்துறை நாக்பூரில் வைத்து தடுத்து நிறுத்திக் கைது செய்த சம்பவம் மிகுந்த கண்டனத்திற்குரியது என்று விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மிகக் காரசாரமாகத் தெரிவித்துள்ளார்.

காவிரி ஆற்று நீர் உரிமை மற்றும் மேகதாது அணை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதி வழியில் போராடத் தொடர்வண்டி மூலம் புதுடெல்லி செல்ல முயன்ற தமிழகத்தைச் சேர்ந்த டெல்டா உழவர்களை, மகாராஷ்டிர மாநிலத்தின் நாக்பூர் பகுதியில் காவல்துறையினர் வலுக்கட்டாயமாகத் தடுத்து நிறுத்தி அத்துமீறி கைது செய்தனர். இச்சம்பவம் மாநில அரசியல் களத்திலும் உழவர் அமைப்புகள் மத்தியிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “தங்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், மாநிலத்தின் நீராதாரம் காக்கவும் ஜனநாயக வழியில் அமைதியாகப் போராடச் செல்லும் தமிழ்நாட்டு விவசாயிகளை நாக்பூரில் வைத்து மகாராஷ்டிர காவல்துறை கைது செய்திருப்பது முற்றிலும் சட்டவிரோதமானது மற்றும் கண்டிக்கத்தக்கது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை ஜனநாயகப் போராட்ட உரிமையைப் பறிக்கும் வகையில் மத்திய அரசும் மாநில அரசுகளும் செயல்படக் கூடாது” எனக் கடுமையாகச் சாடினார்.

மேலும், “டெல்லியில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தச் செல்லும் விவசாயிகளுக்கு மத்திய அரசு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும். உழவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்காமல் அவர்களின் போராட்டங்களை முடக்கும் முயற்சிகளைக் கைவிட வேண்டும்” என்று உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தினார். அமைச்சரின் இந்த அதிரடி அறிக்கை, காவிரி விவகாரத்தில் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவான அரசியல் குரலாக மாறியுள்ளது.

Advertisement

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement