செங்கல்பட்டு அருகே வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த மூன்று வயது பச்சிளம் பெண் குழந்தை மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில், குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து ஏற்படுத்திய நபர்களை உடனடியாகக் கைது செய்யக் கோரி பெற்றோரும் உறவினர்களும் நீதிமன்றம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் கடும் பரபரப்பு நிலவியது.
செங்கல்பட்டு அடுத்த இருங்குன்றம்பள்ளி ரோஷினி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது 3 வயதுப் பெண் குழந்தை மகிழினி, இன்று தனது வீட்டின் அருகே தெருவில் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று எதிர்பாராத விதமாகச் சிறுமி மகிழினியின் மீது ஏறி கொடூர விபத்தை ஏற்படுத்தியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த குழந்தையை அக்கம் பக்கத்தினர் மீட்டு, உடனடி முதலுதவி சிகிச்சைக்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்குச் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை மகிழினி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
கண்ணிமைக்கும் நேரத்தில் தங்களது செல்லக் குழந்தையைப் பறிகொடுத்துக் கதறித் துடித்த பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, விபத்து ஏற்படுத்திய இருசக்கர வாகனத்தில் வந்த இருவரையும் உடனடியாகக் கைது செய்யக் கோரி, குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் செங்கல்பட்டு நீதிமன்றம் அருகே திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டம் காரணமாகச் செங்கல்பட்டு – மதுராந்தகம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்து, வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, விபத்தை ஏற்படுத்தித் தப்பியோடிய நபர்களை விரைவில் கைது செய்வதாக உறுதியளித்தனர். அதிகாரிகளின் அசைக்க முடியாத உறுதிமொழியைத் தொடர்ந்து உறவினர்கள் போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். விபத்தில் பலியான குழந்தை மகிழினிக்கு நாளை பிறந்தநாள் வரவிருந்த சூழலில், பிறந்தநாளுக்கு முதல்நாளே குழந்தை துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்த சம்பவம் பெற்றோர், உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் மத்தியில் நெஞ்சைப் பிழியும் சோகத்தையும் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.













