தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டதால், சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
நாளை சனிக்கிழமை, நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மற்றும் அதனைத் தொடர்ந்து திங்கள்கிழமை விநாயகர் சதுர்த்தி என தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது. இதையொட்டி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தங்கி பணிபுரியும் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல ஒரே நேரத்தில் கார், இருசக்கர வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் புறப்பட்டனர்.
இதன் காரணமாக ஜி.எஸ்.டி சாலையில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஊரப்பாக்கம், ஐயஞ்சேரி மற்றும் கிளாம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் ஊர்ந்தபடி அணிவகுத்து நிற்கின்றன.
சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் மற்றும் பேருந்துகளில் பயணம் செய்யும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இதையடுத்து, நெரிசல் ஏற்பட்டுள்ள பகுதிகளில் போக்குவரத்து போலீசார் ஆங்காங்கே பணியில் ஈடுபட்டு, வாகனங்களை சீராக இயக்கி போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
#ஜிஎஸ்டிசாலை #போக்குவரத்துநெரிசல் #சென்னை #கிளாம்பாக்கம் #ஊரப்பாக்கம் #ஐயஞ்சேரி #தொடர்விடுமுறை #விநாயகர்சதுர்த்தி #சாலைநெரிசல் #சென்னைதிருச்சிநெடுஞ்சாலை












