செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் திமுக வேட்பாளராக போட்டியிடும் இ.பரந்தாமன் அறிமுக கூட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்றது. இதில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பங்கேற்று வேட்பாளர் பரந்தாமனை அறிமுகம் செய்து வைத்தார்.
கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன், திமுக வேட்பாளர் பரந்தாமன் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் வகையில் கட்சியினர் இரவு பகலாக உழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
திமுகவுக்கு இந்த இடைத்தேர்தல் கவுரவமான தேர்தல் என்றும், அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்னர் பதவி விலகியவர் தொடர்பாகவும் அவர் பேசினார். மேலும், கட்சிக்காக தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்றும், வேட்பாளரின் பெயரை எழுத பெயிண்ட் இல்லாவிட்டாலும் கரியைக் கொண்டு எழுதுங்கள் எனவும் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவது பரந்தாமன் அல்ல, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்தான் போட்டியிடுவதாக கூறினார்.
மதுராந்தகத்திற்கும் மு.க.ஸ்டாலினுக்கும் வரலாற்றுத் தொடர்பு இருப்பதாக குறிப்பிட்ட ஆர்.எஸ்.பாரதி, மிசா காலத்தில் மு.க.ஸ்டாலின் சிறை சென்றது உள்ளிட்ட சம்பவங்களை தனது உரையில் குறிப்பிட்டார். மேலும், சட்டமன்றத்தில் சிலர் மு.க.ஸ்டாலினின் வரலாறு குறித்து தெரியாமல் பேசுவதாக விமர்சித்தார்.
மதுராந்தகம் தொகுதியில் திமுக வேட்பாளர் பரந்தாமன் நிச்சயம் வெற்றி பெறுவார் என்றும், மதுராந்தகம் தொகுதியில் திமுக வெற்றி பெற்றால் ஜனவரி மாதத்திற்குள் தற்போதைய ஆட்சி கவிழும் என்றும் ஆர்.எஸ்.பாரதி பேசியது கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே, பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15-ம் தேதி மதுராந்தகம் திமுக வேட்பாளர் பரந்தாமன் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் பேசிய திமுக வேட்பாளர் பரந்தாமன், மதுராந்தகம் தொகுதியில் திமுக வெற்றி விழா, தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சிக்கு மூடு விழாவாக அமையும் என தெரிவித்தார்.
#மதுராந்தகம் #திமுக #திமுக_வேட்பாளர் #பரந்தாமன் #ஆர்எஸ்பாரதி #மதுராந்தகம்_இடைத்தேர்தல் #இடைத்தேர்தல் #செங்கல்பட்டு #தேர்தல் #தமிழ்நாடு_அரசியல்












