வரும் ஆகஸ்ட் 15 சுதந்திரத் திருநாளை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உயர்மட்ட சிறப்பு விருந்தினர்களுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு அளிக்கும் பாரம்பரியத் தேநீர் விருந்துக்கான (At Home Reception) அழைப்பிதழ், இந்திய நாட்டின் கலை மற்றும் கலாச்சார மகத்துவத்தைப் பறைசாற்றும் வகையில் மிக பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
தலைநகரில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று அரசியல் தலைவர்கள், ராஜதந்திரிகள் மற்றும் முக்கியப் பிரமுகர்களுக்குத் தேநீர் விருந்து அளிப்பது வழக்கமான ஒன்று. இந்த ஆண்டிற்கான அழைப்பிதழ் மற்றும் பரிசுப் பெட்டகமானது சத்தீஸ்கர், கோவா, மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய நான்கு மாநிலங்களின் உன்னதமான கிராமப்புற மற்றும் பழங்குடியினக் கலை மரபுகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அகமதாபாத் தேசிய வடிவமைப்பு நிறுவனத்தால் (NID) பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்தத் தொகுப்பில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூகக் கலைகளின் பிணைப்பை உணர்த்தும் பல சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்தத் தேநீர் விருந்திற்கு வருகை தரும் சிறப்பு விருந்தினர்களுக்குத் தனித்துவமாக நெய்யப்பட்ட மகேஸ்வரி துண்டு/பொன்னாடை அணிவித்து வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் மகேஸ்வர் பகுதியின் கைத்தறி நசவு, மகாராஷ்டிராவின் கர்வாத் காதி எல்லைகள், கோவாவின் குன்பி புடவை வடிவமைப்பு மற்றும் சத்தீஸ்கரின் சிந்தா சவுக் மரபுகள் என நான்கு மாநிலங்களின் நெசவு நுட்பங்களையும் ஒருங்கிணைத்து இந்தப் பொன்னாடை பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், மத்தியப் பிரதேசத்தின் பாக் அச்சிடப்பட்ட துணி உறை, சத்தீஸ்கரின் தோக்ரா மற்றும் பித்வா கலைகள், பில் ஓவியங்கள், கோவாவின் அஜுலேஜோ டைல்ஸ் ஓவியங்கள் மற்றும் மகாராஷ்டிராவின் வார்லி ஓவியங்கள் ஆகியவை இந்த அழைப்பிதழ் தொகுப்பை அலங்கரித்து, இந்தியப் பாரம்பரியத்தை உலகளவில் வெளிச்சம்போட்டுக் காட்டுகின்றன.












