சர்வதேச அளவில் மிக முக்கியக் கடல் வர்த்தகப் பாதையாகக் கருதப்படும் ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) விவகாரத்தில், ஈரான் நாட்டுக்குக் கடுமையான கடற்படைத் தடையை விதித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார். மேலும், ஈரானைத் தவிர மற்ற அனைத்து நாடுகளின் சரக்குக் கப்பல்களும் இந்த நீரிணை வழியாகச் செல்லலாம் என்றும், ஆனால் அதற்குப் பாதுகாப்பு கட்டணமாக 20 சதவீத வரி (Toll) செலுத்த வேண்டும் என்றும் அவர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே கடந்த சில நாட்களாக ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதிசெய்யும் பொருட்டு அமெரிக்கா இந்த விபரீத முடிவை எடுத்துள்ளது. இதுகுறித்துத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அதிபர் டிரம்ப், இனிவரும் காலங்களில் அமெரிக்கா “ஹார்முஸ் நீரிணையின் பாதுகாவலன்” (Guardian of the Strait of Hormuz) என்று அழைக்கப்படும் என்றும், இந்த மிக ஆபத்தான கடல் பகுதியில் சர்வதேசக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதற்கான செலவினங்களை ஈடுசெய்யவே இந்த 20 சதவீதக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்றும் நியாயப்படுத்தியுள்ளார்.
இந்த அதிரடி உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்கக் கடற்படையினர் இந்தத் தடையை அமல்படுத்தும் பணிகளைத் தீவிரமாகத் துவங்கியுள்ளனர். உலக அளவில் கொண்டு செல்லப்படும் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவில் ஐந்தில் ஒரு பங்கு இந்த ஹார்முஸ் நீரிணை வழியாகவே கடத்தப்படும் சூழலில், டிரம்ப்பின் இந்த 20 சதவீத வரி விதிப்பு உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது. அமெரிக்காவின் இந்த தன்னிச்சையான நடவடிக்கைக்கு சர்வதேச கடல்சார் அமைப்பு (IMO) கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு, சர்வதேச நீர்வழிகளில் இதுபோன்று கட்டாய வரி வசூலிக்க எந்தவித சட்டப்பூர்வ ஆதாரமும் இல்லை என மறுத்துள்ளது. அதே வேளையில், தங்களின் இறையாண்மையில் அமெரிக்கா தலையிடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என ஈரான் நாட்டு ராணுவமும் எச்சரித்துள்ளதால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.












