சென்னையில் இருந்து திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை நோக்கி சென்ற ஆம்னி பேருந்து, செங்கல்பட்டு புறவழிச்சாலையில் முன்னே சென்ற கனரக லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. வேகமாக வந்த ஆம்னி பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
விபத்தில் ஆம்னி பேருந்தின் முன்பக்க கண்ணாடி முழுவதும் உடைந்ததுடன், பேருந்தின் முன்பகுதியும் சேதமடைந்தது. சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்டது குறித்து தகவல் அறிந்த செங்கல்பட்டு நகர போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
விபத்துக்குள்ளான ஆம்னி பேருந்து மற்றும் கனரக லாரியை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து அகற்றி, சாலையோரமாக நிறுத்தி வைத்தனர். இதனால் செங்கல்பட்டு புறவழிச்சாலையில் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஆம்னி பேருந்தில் பயணம் செய்த 25 பயணிகளும் எந்தவித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதையடுத்து பேருந்தில் பயணம் செய்த பயணிகள் மாற்று பேருந்து மூலம் உடுமலைப்பேட்டைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து செங்கல்பட்டு நகர போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#செங்கல்பட்டு #ஆம்னிபேருந்து #பேருந்துவிபத்து #லாரிவிபத்து #சாலைவிபத்து #செங்கல்பட்டுசெய்திகள் #தேசியநெடுஞ்சாலை #சென்னைதிருச்சிநெடுஞ்சாலை #உடுமலைப்பேட்டை #போக்குவரத்து













