Advertisement
,

“பொதுமக்கள் கொடுத்த தர்மஅடி” 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபர் கைது!

எப்போதும் மக்கள் நடமாட்டத்துடன் பரபரப்பாகக் காணப்படும் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையப் பகுதியில், 8 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வடமாநில வாலிபரைப் போலிஸார் போக்சோ (POCSO) சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் சான் பிரமாணிக் (21). இவர் கிளாம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆட்டோ கேஸ் நிறுவனம் ஒன்றில் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று அப்பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவர் தனது தாயாருடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சான் பிரமாணிக், திடீரென அச்சிறுமியிடம் அநாகரிகமான முறையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

Advertisement

இதனால் கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியும் அவரது தாயாரும் அலறிக் கூச்சலிட்டனர். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு உடனடியாகத் திரண்ட அக்கம் பக்கத்தினரும் பொதுமக்களும், அங்கிருந்து தப்பி ஓட முயன்ற சான் பிரமாணிக்கைச் சுற்றி வளைத்துப் பிடித்துத் தர்மஅடி கொடுத்தனர்.

பின்னர், பொதுமக்கள் பிடியில் சிக்கிய வாலிபரைக் கிளாம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், சான் பிரமாணிக் மீது கடுமையான போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

Advertisement

பொதுமக்கள் நடத்திய தாக்குதலில் காயமடைந்த சான் பிரமாணிக், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். சிகிச்சை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அவரைச் செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் போலிஸார் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, அவரை 15 நாட்கள் நீதித்துறை காவலில் (Judicial Custody) அடைக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். மக்கள் நடமாட்டம் மிகுந்த கிளாம்பாக்கம் பகுதியில் நடைபெற்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement