குடும்பத் தகராறில் சகோதரரைத் தாக்கிய வழக்கில், சென்னை உயர் நீதிமன்றச் சமரசத் தீர்வு மையத்தில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் எந்தவொரு உடன்பாடும் எட்டப்படாததால், அமைச்சர் மரிய வில்சன் மீண்டும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி நேரில் ஆஜராக உயர் நீதிமன்றச் சமரசத் தீர்வு மையம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2022-ஆம் ஆண்டு குடும்பத் தகராறு காரணமாகத் தனது சகோதரர் மரிய குலோத் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று அவரையும் அவரது மனைவியையும் தாக்கியதாகப் புதுச்சேரி போலிஸார் அமைச்சர் மரிய வில்சன் மீது வழக்குப் பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இரு தரப்பினரும் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமரசத் தீர்வு மையத்தை அணுகித் தீர்வு காண உத்தரவிட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து ஏற்கனவே இரண்டு முறை சமரசப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட நிலையில், இன்று 3-வது முறையாக நீதிபதி பாலசுப்பிரமணியம் முன்னிலையில் அமைச்சர் மரிய வில்சன் மற்றும் அவரது சகோதரர் மரிய குலோத் ஆகியோர் நேரில் ஆஜராகினர்.
அங்கிருந்த சமரச மையத்தில் இரு தரப்பிற்கும் இடையே சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தீவிர பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இருப்பினும், இரு தரப்பினருக்கும் இடையே எந்தவொரு சுமூகமான உடன்பாடும் எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படாததைத் தொடர்ந்து, வழக்கை ஒத்திவைத்த சமரசத் தீர்வு மையம், மீண்டும் வரும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி அமைச்சர் மரிய வில்சன் மற்றும் அவரது சகோதரர் மரிய குலோத் ஆகிய இருவரையும் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.













