தமிழகத்தில் நடத்தப்படும் எந்தவொரு அரசு விழாவிலும் தமிழ்த்தாய் வாழ்த்துக்குத் தான் எப்போதும் முதலிடம் அளிக்கப்படும் என்றும், மத்திய அரசு வேண்டுமென்றே தேவையில்லாத சர்ச்சைகளை உருவாக்கித் தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுக்க நினைப்பதாகவும் அமைச்சர் அருண்ராஜ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் வழக்கமான முதலிடத்தைப் பெறாமல் 3-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுப் பாடப்பட்ட விவகாரம் தமிழக அரசியல் களத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்திற்குத் தமிழக அமைச்சர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் ஆளுநரின் போக்கைக் கண்டித்துத் தொடர்ந்து தங்களது குரல்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அருண்ராஜ், “தமிழைத் தாயாகப் போற்றும் இந்தத் தமிழ் மண்ணில் நடத்தப்படும் எந்தவொரு அரசு மற்றும் பல்கலைக்கழக விழாவிலும் தமிழ்த்தாய் வாழ்த்துக்குத் தான் எப்போதும் முதலிடம். அதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. இதுதான் தமிழக அரசின் உறுதியான நிலைப்பாடு” எனத் தெரிவித்தார்.
மேலும் மத்திய அரசின் போக்கை விமர்சித்த அவர், “மாநிலத்தின் பண்பாட்டையும் அரசாணை நடைமுறைகளையும் மதிக்காமல், ஆளுநர் மூலமாக மத்திய அரசு தேவையில்லாத சர்ச்சைகளை உருவாக்கித் தமிழக அரசுக்கு நெருக்கடியைக் கொடுக்க முற்படுகிறது. மாநில உரிமைகளையும் தமிழர்களின் உணர்வுகளையும் சீண்டிப் பார்க்கும் மத்திய அரசின் இத்தகைய போக்கை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது” எனக் காரசாரமாகக் குற்றம்சாட்டியுள்ளார்.












