மதுராந்தகம் தொகுதி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினரான மரகதம் குமரவேல், தன்னை அவதூறாகவும் இழிவாகவும் பேசி வரும் அதிமுக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்ட மரகதம் குமரவேல், சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.
இந்நிலையில், அதிமுக மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் ஆறுமுகம் உள்ளிட்ட சிலர், தன்னை பெண் என்றும் பாராமல் அவதூறாகவும், தரக்குறைவாகவும் விமர்சித்து வருவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ள மரகதம் குமரவேல், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த புகார் தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












