Advertisement

மாமல்லபுரம் வடிகால்வாய் பணி மீண்டும் வேகம்: நகராட்சி – மின்வாரிய மோதலுக்கு முடிவு

மாமல்லபுரத்தில் கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக முடங்கிக் கிடந்த வடிகால்வாய் அமைக்கும் பணி, நகராட்சி நிர்வாகம் மற்றும் மின்வாரியத்தின் ஒத்துழைப்பால் மீண்டும் வேகமெடுத்துள்ளது. நீண்ட நாட்களாக நிலவி வந்த நிர்வாக தாமதம் காரணமாக பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வந்த நிலையில், தற்போது பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.

மாமல்லபுரம் திருக்கழுக்குன்றம் சாலை பகுதியில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி போக்குவரத்து மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்து வந்தது. இதைத் தீர்க்கும் வகையில், மழைநீரை பகிங்ஹாம் கால்வாய்க்கு கொண்டு செல்ல கான்கிரீட் வடிகால்வாய் அமைக்க நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டது. இதற்காக ஒப்பந்தம் வழங்கப்பட்டு, கடந்த ஜனவரி மாதம் பணிகள் தொடங்கப்பட்டன.

Advertisement

ஆனால், கால்வாய் அமைக்கப்படவிருந்த பகுதியில் தெருவிளக்கு மின் கம்பங்கள், புதைமின் கேபிள்கள் மற்றும் மின் இணைப்பு பெட்டிகள் இருந்ததால் அவற்றை மாற்றியமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. வழக்கமாக இதற்கான கட்டணத்தை செலுத்தி மின்வாரியத்தின் அனுமதி பெற்று பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால், தேவையான நடைமுறைகள் முழுமையாக பின்பற்றப்படாத நிலையில் பணிகள் தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக மின்வாரியம் மின் உபகரணங்களை இடமாற்றம் செய்யாததால், வடிகால்வாய் பணி பாதியிலேயே நின்றது. வீடுகளின் முன்பாக தோண்டப்பட்ட பள்ளங்கள் பல மாதங்களாக அப்படியே இருந்ததால், மக்கள் மரப்பலகைகள் வைத்து ஆபத்தான முறையில் நடமாட வேண்டிய சூழல் ஏற்பட்டது.

Advertisement

இந்நிலையில், மின் கம்பங்கள், கேபிள்கள் மற்றும் மின் பெட்டிகளை மாற்றியமைக்க தேவையான ரூ.28 லட்சம் தொகையை நகராட்சி நிர்வாகம் செலுத்தியுள்ளது. இதையடுத்து மின்வாரியம் இடமாற்றப் பணிகளை மேற்கொண்டு வருவதால், வடிகால்வாய் கட்டுமானப் பணிகளும் தற்போது மீண்டும் வேகமாக நடைபெற்று வருகின்றன.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement