மதுராந்தகம் நகரின் முக்கிய வர்த்தக மையமாக விளங்கும் பஜார் வீதியில் போக்குவரத்து போலீசார் விதித்துள்ள தடையை மீறி கனரக வாகனங்கள் தொடர்ந்து நுழைந்து வருவதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
மதுராந்தகம் பஜார் வீதி தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், வணிகர்கள் மற்றும் மாணவர்கள் நடமாடும் பரபரப்பான பகுதியாக உள்ளது. இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த உத்தரவை மீறி கல்குவாரி லாரிகள் உள்ளிட்ட பல்வேறு கனரக வாகனங்கள் நகரின் முக்கிய சாலைகள் வழியாக தொடர்ந்து சென்று வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பதுடன், பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், முதியவர்கள் உள்ளிட்டோர் சாலையை கடக்கும்போது பெரும் சிரமத்தை சந்திப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக உச்சநேரங்களில் கனரக வாகனங்களின் இயக்கம் காரணமாக விபத்து அபாயமும் அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, போக்குவரத்து போலீசார் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு, தடையை மீறும் கனரக வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.













