தாம்பரம் அடுத்த சேலையூர் மாடம்பாக்கம் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த 15 வயது பத்தாம் வகுப்பு மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றதாக 25 வயது இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மாணவி, தந்தையை இழந்த நிலையில் தனது தாய் மற்றும் தம்பியுடன் வசித்து வருகிறார். அவரது தாய் மருத்துவமனை ஒன்றில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், நேற்று இரவு மாணவியின் தாய் பணிக்கு சென்றிருந்தபோது, மாணவியும் அவரது தம்பியும் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது வீட்டின் அருகே உள்ள குளத்தில் அடிக்கடி மீன்பிடிக்க வரும் பதுவஞ்சேரி பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ் (25), மாணவியின் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது.
மாணவியின் தம்பியை டீ வாங்கி வருமாறு வெளியே அனுப்பிவிட்டு, வீட்டில் தனியாக இருந்த மாணவியிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் மாணவி சத்தமிட்ட நிலையில், அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு வந்து இளைஞரை பிடித்து சேலையூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து சேலையூர் போலீசார், ஆனந்தராஜை சிட்லபாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணைக்குப் பின்னர், சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றதாக கூறப்படும் புகாரின் அடிப்படையில், ஆனந்தராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
பின்னர், ஆனந்தராஜை மருத்துவப் பரிசோதனைக்காக தாம்பரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு, சிட்லபாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் போலீசார் அழைத்து வந்தனர்.
அப்போது செய்தியாளர்கள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதைத் தடுக்கும் வகையில், ஆனந்தராஜை ஆட்டோவில் ஏற்றிய பெண் போலீஸ், அவரது முகம் தெரியாத வகையில் தனது முதுகுக்குப் பின்னால் படுக்க வைத்து அழைத்துச் சென்றார்.
இதனைத் தொடர்ந்து ஆனந்தராஜை நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்திய போலீசார், பின்னர் அவரை சிறையில் அடைத்தனர்.
#மாடம்பாக்கம் #சேலையூர் #போக்சோ #சிறுமி #பாலியல்தொல்லை #தாம்பரம் #செங்கல்பட்டு #Madhambakkam #Selaiyur #POCSO













