அதிமுகவில் இருந்து விலகி சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியை ராஜினாமா செய்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மரகதம் குமரவேல், எஸ். ஜெயக்குமார், பி. சத்யபாமா மற்றும் இசக்கி சுப்பையா ஆகிய 4 பேரும் சட்டமன்றத் தலைவர் (சபாநாயகர்) ஜே.சி.டி. பிரபாகர் முன்பாக நேரில் ஆஜராகி தங்களது தரப்பு விளக்கங்களை அளித்தனர்.
சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற இவர்கள், சட்டப்பேரவையில் கட்சி கொறடா பிறப்பித்த உத்தரவை மீறி தவெக அரசுக்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களித்தனர். பின்னர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்தனர். இதனைத் தொடர்ந்து, கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் இவர்கள் மீது தகுதியிழப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரிடம் புகார் மனு அளித்திருந்தார்.இந்த மனு மீதான தொடர் விசாரணை சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சபாநாயகரின் அறையில் நடைபெற்றது.
ஆகஸ்ட் 4-ம் தேதி நடைபெற்ற இந்த விசாரணையில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 4 பேரும் நேரில் ஆஜராகினர். அதேபோல், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் தளவாய் சுந்தரம், அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் தாமரை ராஜேந்திரன் ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
இருதரப்பு பிரதிநிதிகளிடம் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விரிவான விசாரணையை மேற்கொண்டார். சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முடிவடைந்த பின்னர், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இறுதி முடிவு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.












