இன்னும் ஒரு பத்தாண்டு காலத்தில், அதாவது வரும் 2036-ஆம் ஆண்டுக்குள் உலகில் பணம் (Money) என்ற ஒன்றின் தேவையே முற்றிலும் இல்லாது போய்விடும் என்று பிரபல தொழிலதிபரும் ‘டெஸ்லா’ மற்றும் ‘எக்ஸ்’ நிறுவனங்களின் தலைவருமான எலான் மஸ்க் அதிரடியாகக் கணித்துள்ளார்.
தொழில்நுட்ப உலகின் எதிர்காலம் குறித்த மாநாடு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய எலான் மஸ்க், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் மேம்படுத்தப்பட்ட ரோபோட்டிக்ஸ் தொழில்நுட்பங்களின் அபரிமிதமான வளர்ச்சி மனித சமூகத்தின் பொருளாதாரக் கட்டமைப்பையே தலைகீழாக மாற்றப்போகிறது என்றார். “செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமும் மனித உருவ ரோபோக்களும் (Humanoid Robots) மனிதர்களை விடப் பல மடங்கு வேகத்திலும் திறமையாகவும் அனைத்து வகையான பொருட்களையும் சேவைகளையும் தயாரித்து வழங்கத் தொடங்கும்” என அவர் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், “எதிர்காலத்தில் உணவு, இருப்பிடம், சுகாதாரம், ஆடம்பரப் பொருட்கள் உட்பட மனித குலத்திற்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் தட்டுப்பாடே இல்லாத அளவுக்கு மிகுதியாகக் கிடைக்கும் (Universal Abundance). எதற்கும் தட்டுப்பாடு இல்லாத நிலவும் போது, பொருட்களைப் பண்டமாற்றம் செய்யவோ அல்லது வாங்கவோ பயன்படும் ‘பணம்’ என்ற காகிதத்திற்கு எவ்வித மதிப்போ தேவையோ இல்லாமல் போய்விடும்” எனத் தெரிவித்தார். உலகப் பொருளாதாரத்தின் அஸ்திவாரத்தையே கேள்விக்குள்ளாக்கும் எலான் மஸ்க்கின் இந்த தொலைநோக்குக் கணிப்பு, சர்வதேச வர்த்தக வல்லுநர்கள் மற்றும் தொழில்நுட்ப ஆர்வலர்கள் மத்தியில் பெரும் விவாதத்தையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.












