Advertisement

“தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மூன்றாம் இடமா?” – ஆளுநர் அர்லேகருக்கு கடும் கண்டனம்!

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் வழக்கமான முதலிடத்தைப் பெறாமல், 3-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுப் பாடப்பட்ட விவகாரம் தமிழக அரசியல் களத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரின் இந்த நடவடிக்கைக்குத் தமிழக அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவின் தொடக்கத்தில் வழக்கமான நடைமுறைகள் புறக்கணிக்கப்பட்டு, முதலில் ‘வந்தே மாதரம்’ பாடலும், இரண்டாவதாகத் ‘தேசிய கீதமும்’, அதன்பின்னரே மூன்றாவதாகத் ‘தமிழ்த்தாய் வாழ்த்தும்’ பாடப்பட்டது.

Advertisement

இதற்கு உடனடி எதிர்ப்பைப் பதிவு செய்துள்ள தங்கம் தென்னரசு உட்படப் பல தலைவர்களின் கருத்துகளைத் தொடர்ந்து, அமைச்சர் நிர்மல்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழகத்தில் எந்தவொரு அரசு மற்றும் பல்கலைக்கழக விழாக்களிலும் தமிழ்த்தாய் வாழ்த்துக்குத் தான் எப்போதும் முன்னுரிமை கொடுக்க வேண்டும். அதை மீறி மூன்றாவதாகப் பாடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

அதேபோல், இந்த விவகாரம் குறித்துக் கொதித்தெழுந்துள்ள தங்கம் தென்னரசு, “மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக விழாவிலேயே தமிழ்த்தாய் வாழ்த்து பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது வேதனையளிக்கிறது. தமிழைத் தாயாகப் போற்றும் இந்தத் தமிழ் மண்ணில், தமிழ்த்தாய் வாழ்த்தைப் புறந்தள்ளிப் பின்னுக்குத் தள்ளிய ஆளுநரின் செயலை என்னவென்று சொல்வது?” என ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

இச்சம்பவம் குறித்துக் விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கூறுகையில், “தமிழ்த்தாய் வாழ்த்துக்கு உரிய மரியாதையைத் தராமல், தொடர்ந்து தமிழர்களின் உணர்வுகளைக் காயப்படுத்தும் ஆளுநரின் போக்கு வாடிக்கையாகிவிட்டது. மாநிலத்தின் பண்பாட்டையும் அரசாணை நடைமுறைகளையும் அவமதிக்கும் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது” என விமர்சித்துள்ளார். இச்சம்பவம் கல்வி மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement