சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ஆம் கட்டப் பணிகளில் முக்கியக் மைல்கல்லாகப் போரூர் முதல் பூவிருந்தவல்லி வரையிலான வழித்தடத்தில் இயக்கப்படவுள்ள அதிநவீன ஆளில்லா ரயிலில் (Driverless Train) நாளை (ஜூலை 29) முதலமைச்சர் விஜய் நேரில் பயணித்துத் தீவிர ஆய்வு மேற்கொள்கிறார்.
சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் 116.1 கிலோமீட்டர் தொலைவிற்கு 3 வழித்தடங்களில் 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் அதிவேகமாக நடைபெற்று வருகின்றன. இதில், பூவிருந்தவல்லி முதல் லைட் ஹவுஸ் வரையிலான 4-வது வழித்தடத்தில், முதற்கட்டமாகப் போரூர் வழித்தடச் சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளன.
இப்பாதையில் பயன்பாட்டிற்கு வரவுள்ள ஓட்டுநர் இல்லாத அதிநவீன ரயில்களின் (Unmanned / Driverless Trains) சோதனையோட்டம் மற்றும் தொழில்நுட்பப் பரிசோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில், நாளை முதலமைச்சர் விஜய் போரூர் – பூவிருந்தவல்லி வழித்தடத்தில் இயக்கப்படும் ஆளில்லா மெட்ரோ ரயிலில் நேரில் பயணித்து ஆய்வு மேற்கொள்கிறார். ரயிலின் பாதுகாப்பு அம்சங்கள், பயணிகளுக்கான உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமிக்ஞை அமைப்புகள் (Signalling Systems) குறித்து மெட்ரோ அதிகாரிகளிடம் அவர் கேட்டறியவுள்ளார்.
சென்னை மெட்ரோ ரயில் வரலாற்றிலேயே முதன்முறையாக ஓட்டுநரில்லா ரயில்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ள நிலையில், முதலமைச்சரின் இந்த நேரடி ஆய்வுப் பயணம் பொதுமக்கள் மற்றும் மெட்ரோ பயணிகள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆய்வுக்குப் பின் இச்சேவை விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.












