Advertisement

“சென்னையில் குப்பை மலைக்கு முற்றுப்புள்ளி” – குப்பைகளைத் தரம் பிரிக்க முதலமைச்சர் விஜய் ஆணை!

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் நாள்தோறும் சேகரிக்கப்படும் 6,150 டன் குப்பைகளையும் வீடுகள் மற்றும் ஆதாரப் புள்ளிகளிலேயே மக்கும் குப்பை, மக்காத குப்பை எனத் துல்லியமாகத் தரம் பிரிக்க வேண்டும் என்றும், அவற்றில் மக்கும் கழிவுகளை முழுவதுமாக இயற்கை எரிவாயு (Bio-CNG) மற்றும் உரமாகவும், மக்காத பிளாஸ்டிக் கழிவுகளைச் சாலைகள் அமைக்கவும், சிமெண்ட் ஆலைகளுக்கு மாற்றுக் எரிபொருளாகவும் மாற்றிப் பயன்படுத்த வேண்டும் எனத் தமிழக முதலமைச்சர்  விஜய்  சென்னை மாநகராட்சி அலுவலர்களுக்கு அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சாா்பிலான உயர்மட்ட கலந்தாய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் அவர்கள் கலந்துகொண்டு மாநகராட்சியின் தூய்மைப் பணிகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டார். பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் தினமும் சுமார் 6,150 மெட்ரிக் டன் திறந்தவெளி கழிவுகள் மற்றும் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வரும் நிலையில், கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி குப்பை கொட்டும் வளாகங்களில் மீண்டும் கழிவுகள் மலைபோல் குவிவதைத் தடுக்கும் பொருட்டு இந்த புதிய உள்கட்டமைப்புத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

Advertisement

இக்கூட்டத்தில் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் பிறப்பித்த முதன்மை வழிகாட்டுதல்களில், மண்டல அளவிலேயே பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி மக்கும் மற்றும் மக்காத கழிவுகளை 100 சதவீதம் தரம் பிரித்துச் சேகரிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். இதில் சேகரிக்கப்படும் மக்கும் கழிவுகளைப் பரவலாக்கப்பட்ட உரம் தயாரிப்பு மையங்கள் மற்றும் பயோ-சிஎன்ஜி (Bio-CNG) எரிவாயு ஆலைகளுக்கு அனுப்பி முழுமையாக மறுசுழற்சி செய்ய வேண்டும் என்றும், எஞ்சிய மக்காத பிளாஸ்டிக் கழிவுகளைத் தரம் பிரித்துத் தார்ச் சாலைகள் (Plastic Roads) அமைக்கப் பயன்படும் வகையில் பொடியாக்கவும், எரியக்கூடிய பிற பிளாஸ்டிக்கை கழிவு எரிபொருளாக (RDF) மாற்றிக் கழிவு மேலாண்மை அடிப்படையில் சிமெண்ட் ஆலைகளுக்கு அனுப்பவும் சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகளுக்குத் திட்டவட்டமாக உத்தரவிட்டார்.

சென்னை நகரத்தைச் சர்வதேசத் தரத்திலான எழில்மிகு தூய்மை நகரமாக மாற்றுவதே தங்களது நோக்கம் என்றும், குப்பைகளை மூலத்திலேயே தரம் பிரிக்கும் இந்த நவீன மறுசுழற்சி நடைமுறைகள் மூலம் சென்னை நகரின் குப்பை மேடுகள் இல்லாத சுற்றுச்சூழல் பாதுகாப்பை விரைவில் எட்ட முடியும் என்றும் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இக்கூட்டத்தில் நகராட்சி நிர்வாகத் துறை தலைமை அதிகாரிகள், சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் மண்டல நல அலுவலர்கள் பலரும் பங்கேற்றனர்.

Advertisement

 

 

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement