கர்நாடக அணைகளிலிருந்து போதிய தண்ணீர் திறந்து விடப்படாததால் மேட்டூர் அணைக்கான நீர் வரத்து மிகக் கடுமையாகக் குறைந்துள்ள சூழலில், தமிழகத்தின் காவிரி நீர் உரிமையைப் பாதுகாக்கவும், கர்நாடக அரசின் மேகதாது அணைத் திட்டத்தை முற்றிலுமாகத் தடுத்து நிறுத்தவும் அடுத்தகட்டமாக மேற்கொள்ள வேண்டிய சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் குறித்துத் தமிழக முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள், உய அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை மேற்கொண்டார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற இந்த உயர் மட்ட ஆய்வுக் கூட்டத்தில், நீர்வளத் துறை, சட்டத் துறை அமைச்சர்கள் மற்றும் காவிரி தொழில்நுட்பக் குழு அலுவலர்கள் கலந்துகொண்டனர். காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில சட்டவிரோதமாக அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், அதனைச் சட்டரீதியாக எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும், உச்ச நீதிமன்றம் (Supreme Court) மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) முன் தமிழக அரசு சார்பில் முன்னெடுக்க வேண்டிய அடுத்தகட்ட அழுத்தமான நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்துத் தகவல்கள் தெரிவிக்கையில், “காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்திற்கு வர வேண்டிய உரியப் பங்கு நீரைக் கர்நாடகா உடனடியாகத் திறந்துவிட வலியுறுத்துவதுடன், மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகாவின் விரிவான திட்ட அறிக்கைக்கு (DPR) ஒன்றிய அரசு எவ்வித அனுமதியும் வழங்கக் கூடாது என்பதை உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் வலுவாக வலியுறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், குடிநீர் தேவையைத் தீர்க்கும் மேட்டூர் அணையின் உள்கட்டமைப்பையும் பாதுகாப்பதே தமிழக அரசின் முதன்மை நோக்கம்” என அதிகாரிகள் தெரிவித்தனர். இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் என். ஆனந்த், பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார், அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.












