Advertisement

பெரம்பூரில் எம்.எல்.ஏ அலுவலகத்தை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்!

முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் முதன்முறையாகத் தனது சொந்த தொகுதியான பெரம்பூருக்கு வருகை தந்த தமிழக முதலமைச்சரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான திரு. ச. ஜோசப் விஜய், அங்கு புதுப்பிக்கப்பட்ட எம்.எல்.ஏ தொகுதி அலுவலகத்தைத் திறந்து வைத்தார். மேலும், இந்த அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த இ-சேவை மையத்தையும் தொடங்கி வைத்த அவர், பல்வேறு அரசு சேவைகளுக்காக விண்ணப்பித்திருந்த பயனாளிகளுக்குச் சான்றிதழ்களைத் தன் கரங்களால் வழங்கிச் சிறப்பித்தார்.

சென்னை வியாசர்பாடி சர்மா நகர் முதலாவது பிரதான சாலையில் அமைந்துள்ள இந்த சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், பொதுமக்கள் தங்களின் தேவைகளை எளிதில் அணுகும் பொருட்டு நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. அலுவலகத்தைத் திறந்து வைத்து, அங்கு நிறுவப்பட்டிருந்த கட்சியின் கொள்கைத் தலைவர்களின் உருவப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய முதலமைச்சர் விஜய், பின்னர் அங்குள்ள இ-சேவை மையத்தின் செயல்பாடுகளைப் பார்வையிட்டார். தமிழ்நாடு மின்னளுமை முகமை ஊழியர்களால் இயக்கப்படவுள்ள இந்த மையத்தின் மூலம் ஆதார், பான் கார்டு, குடும்ப அட்டை, பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்கள் போன்ற குடிமக்கள் சேவைகளை மக்கள் ஒரே இடத்தில் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் அடையாளமாக, முதற்கட்டமாக விண்ணப்பித்திருந்த பயனாளிகளுக்குச் சான்றிதழ்களை வழங்கித் திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார்.

Advertisement

அதனைத் தொடர்ந்து, பெரம்பூர் சட்டமன்றத் தொகுதிக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட “ஜன சேவன வேதி” (Jana Sevana Vedhi) என்ற அதிநவீன மொபைல் செயலி மற்றும் இணையதளத்தையும் முதலமைச்சர் அறிமுகப்படுத்தினார். இதன் மூலம் தொகுதி மக்கள் குடிநீர், மின்சாரம், சாலை மற்றும் சுகாதாரம் சார்ந்த தங்களின் குறைகளை நேரடியாக எம்.எல்.ஏ அலுவலகத்திற்குப் பதிவேற்றம் செய்து தீர்வு காண முடியும். இந்த நிகழ்வுக்குப் பின், பெரம்பூர் தொகுதியில் சுமார் 1,000 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்படவுள்ள வீட்டுவசதி, பாதாளச் சாக்கடை மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுப் பணிகள் குறித்து உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் தீவிர ஆலோசனை நடத்தினார். முதற்கட்டமாக வியாசர்பாடி மற்றும் முல்லை நகர் பகுதிகளில் உள்ள பழுதடைந்த குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகளை இடித்துப் புதிய வீடுகள் கட்டும் திட்டத்திற்கும், தொகுதியின் இதர அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் அவர் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த அதிரடித் திட்டங்களால் பெரம்பூர் தொகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 

Advertisement

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement