Advertisement

நாய்கள் கடித்து மான் உயிரிழப்பு: செய்யூரில் சோகம்

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே உள்ள கன்னிமங்கலம் கிராமத்தில் தெருநாய்கள் தாக்கியதில் புள்ளிமான் குட்டி உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னிமங்கலம் பகுதியில் நேற்று காலை சுமார் 1 வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளிமான் ஒன்று மேய்ச்சலுக்காக வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த பகுதியில் சுற்றித்திரிந்த தெருநாய்கள் திடீரென மானை துரத்தி தாக்கியுள்ளன. பல நாய்கள் சேர்ந்து கடித்து குதறியதால் மான் குட்டி படுகாயமடைந்தது.

Advertisement

மானின் அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த பொதுமக்கள், தெருநாய்களை விரட்டியடித்து மான் குட்டியை மீட்டனர். பின்னர் சம்பவம் குறித்து வனத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்து வந்த அதிகாரிகள், காயமடைந்த மானுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர். இருப்பினும் பலத்த காயம் காரணமாக சிகிச்சை பலனின்றி புள்ளிமான் குட்டி பரிதாபமாக உயிரிழந்தது.

Advertisement

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியதுடன், கிராமப்புறங்களில் அதிகரித்து வரும் தெருநாய்கள் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது. வனவிலங்குகள் கிராமப்புறங்களுக்கு வரும்போது அவற்றை பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement