செங்கல்பட்டில் இன்று அதிகாலையில் இன்வெர்ட்டரில் ஏற்பட்ட திடீர் மின்கசிவு காரணமாக எரிவாயு சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறிய விபத்தில், முதியவர்கள் உட்பட மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர். செங்கல்பட்டு நத்தம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (64).
இவர் தனது வீட்டின் வாசற்படி அருகே எரிவாயு சிலிண்டரை வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இன்று அதிகாலை ஜெயக்குமார் தனது வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த காரை எடுப்பதற்காக வந்தபோது, எதிர்பாராத விதமாக வீட்டில் இருந்த மின்சேமிப்புக்கலனில் (இன்வெர்ட்டர்) திடீரென மின்கசிவு ஏற்பட்டுத் தீப்பற்றியுள்ளது. இந்தத் தீ அருகில் இருந்த எரிவாயு சிலிண்டரில் மளமளவெனப் பரவியதால், கண் இமைக்கும் நேரத்தில் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.
இந்தத் திடீர் வெடி விபத்தின் கோரப்பிடியில் சிக்கி ஜெயக்குமார் (64), சண்முகம் (70) மற்றும் கார்த்திகேயன் (30) ஆகிய மூன்று பேரும் படுகாயமடைந்தனர். சிலிண்டர் வெடித்த வேகத்தில் ஏற்பட்ட தீப்பொறி அங்கு நிறுத்தப்பட்டிருந்த சொகுசு கார் மற்றும் வீட்டின் குளிரூட்டி (ஏசி) உள்ளிட்ட பொருட்கள் மீது பரவியதால், அவை முற்றிலும் தீயில் எரிந்து சாம்பலாகின. விடியற்காலையில் கேட்ட இந்த பயங்கர சத்தத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டதோடு, காயமடைந்த மூன்று பேரையும் மீட்டு சிகிச்சைக்காகச் செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள லோக்கல் காவல்துறை, விபத்துக்கான முழுமையான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












