பழனி முருகன் கோயில் தங்கும் விடுதிகளின் கட்டணங்களை அதிரடியாக உயர்த்தி, அறைகள் கிடைக்காமல் அவதியுறும் ஏழை முருக பக்தர்களின் தலையில் தமிழக வெற்றி கழக அரசு பேரிடியை இறக்கியுள்ளது என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன் மிகக் கடுமையான சாடியுள்ளார். அறநிலையத் துறையின் இந்த அநியாய கட்டணக் கொள்ளையை பாஜ வன்மையாகக் கண்டிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உலகப் புகழ்பெற்ற ஆன்மீகத் தலமான பழனி முருகன் கோயிலுக்குத் தினமும் ஆயிரக்கணக்கான ஏழை, எளிய பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். இவர்களின் வசதிக்காகக் கோயில் நிர்வாகம் சார்பில் நடத்தப்படும் தங்கும் விடுதிகளின் கட்டணங்களை தற்போதைய அரசு உயர்த்தியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், ஆன்மீகப் பயணம் மேற்கொள்ளும் சாதாரண நடுத்தர மக்களின் நிலையை இந்த அரசு கொஞ்சமும் சிந்தித்துப் பார்க்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.
ஏற்கனவே தங்கும் விடுதிகளில் போதிய அறைகள் இன்றி ஏழைப் பக்தர்கள் தவித்து வரும் நிலையில், தற்போது செய்யப்பட்டுள்ள இந்த அநியாய கட்டண உயர்வு அவர்களின் தலையில் சுமையை ஏற்றியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். கோயில்களை வெறும் வருமானம் ஈட்டும் தளமாக மட்டுமே தவெக அரசு பார்க்கிறது என்றும், பக்தர்களின் நலனில் அக்கறை காட்டாத இந்த மக்கள் விரோதக் கட்டண உயர்வை இந்து சமய அறநிலையத் துறை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார். தவறும்பட்சத்தில், பக்தர்களைத் திரட்டி பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாபெரும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் நயினார் நாகேந்திரன் எச்சரித்துள்ளார்.












