செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் அருகே இடி மின்னலுடன் பெய்த கனமழையின் போது, திடீரென இடி தாக்கியதில் இரண்டு தென்னை மரங்கள் தீப்பற்றி எரிந்து சேதமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பீதியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் நிலவி வரும் வெப்பச்சலனம் காரணமாகப் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாகச் செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான ஊரப்பாக்கம், வண்டலூர் உள்ளிட்ட இடங்களில் இன்று காலை முதல் வழக்கத்திற்கு மாறாக வெயிலின் தாக்கம் அதிகமாக வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில், மாலை வேளையில் திடீரெனக் கருமேகங்கள் சூழ்ந்து, சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக இடி மின்னலுடன் கூடிய பலத்த கனமழை கொட்டித் தீர்த்தது.
இந்தக் கனமழையின் போது கிளாம்பாக்கம் அடுத்த கீரப்பாக்கம் பகுதியில் திடீரெனப் பயங்கர சத்தத்துடன் இடி மின்னல் தாக்கியது. அதில் அங்கிருந்த இரண்டு தென்னை மரங்கள் மீது நேரடியாக இடி விழுந்ததில், மரங்களின் உச்சிப் பகுதி கணப்பொழுதில் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதனை நேரில் கண்டு உறைந்து போன பாதசாரிகளும், அப்பகுதி பொதுமக்களும் அச்சத்தில் அலறியடித்துக் கொண்டு பாதுகாப்பான இடங்களை நோக்கி நாலாபுறமும் ஓட்டம் பிடித்தனர்.
மழையின் நடுவே தென்னை மரங்கள் இடி தாக்கி தீப்பற்றி எரிந்த இந்த அதிர்ச்சிச் சம்பவம், கீரப்பாக்கம் மற்றும் கிளாம்பாக்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிறிது நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












