தெற்கு ஆசியப் பகுதியில் தீவிரமடைந்துள்ள தென்மேற்குப் பருவமழை காரணமாகக் கேரள மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டும் உயிரிழப்புகள் பதிவாகியும் வருகின்றன.
அம்மாநிலத்தில் அடுத்த சில தினங்களுக்கு மிகத் தீவிரக் கனமழை தொடரும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வெளியிட்டுள்ள தகவலின்படி, பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய 8 மாவட்டங்களுக்கு அதிதீவிர மழைக்கான ‘ரெட் அலர்ட்’ (Red Alert) விடுக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் ஆலப்புழா, திருச்சூர், பாலக்காடு மற்றும் மலப்புரம் ஆகிய 4 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.
நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் கொண்ட மலைப்பகுதிகளில் வாழும் மக்கள் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு கேரள அரசு தீவிர அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. மறுபுறம், தெற்கு கர்நாடகா மற்றும் அதனை ஒட்டிய கடலோர ஆந்திரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டலங்களில் இன்றும் நாளையும் மிதமான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) அறிவித்துள்ளது.
குறிப்பாகத் திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், திருச்சி மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த தரைக்காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.












