நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் எவ்வித முக்கிய விவாதங்களும் நடைபெறாமல் முடங்குவதற்குப் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரசும் அதன் கூட்டணிக் கட்சிகளுமே முழுக் காரணம் என்று பா.ஜ.க. தேசியச் செய்தித் தொடர்பாளரும், லோக்சபா எம்.பி.யுமான சம்பித் பத்ரா மிகக் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்றச் செய்தியாளர்கள் சந்திப்பில் உரையாற்றிய அவர், நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு கூட்டத்தொடரை நடத்துவதற்கும் மக்களின் வரிப்பணத்திலிருந்து கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டினார். ஆனால், தற்போதைய கூட்டத்தொடர் தொடங்கியது முதலே கேள்வி நேரம் (Question Hour) மற்றும் பூஜ்ஜிய நேரம் (Zero Hour) ஆகியவை எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றன.
இதன் காரணமாக, நாட்டின் பல்வேறு தொகுதிகளில் இருந்தும் வருகை தந்துள்ள மக்கள் பிரதிநிதிகள் தங்கள் பகுதிப் பிரச்சினைகளையும், நாட்டின் முக்கிய மசோதாக்கள் குறித்த விவாதங்களையும் சபையில் முன்வைக்க முடியாமல் அவையின் நேரம் வீணடிக்கப்பட்டு வருவதாக சம்பித் பத்ரா குற்றம் சாட்டினார். காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் அரங்கேறும் தேர்வுத் தாள் கசிவு விவகாரங்களில் மெளனம் காக்கும் எதிர்க்கட்சிகள், நாடாளுமன்றத்தில் இரட்டை நிலைப்பாட்டுடன் நடந்து கொள்வதாகவும் அவர் கடுமையாகச் சாடினார்.












