தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராகவும், மற்றொரு புறம் ‘மண்டேலா’, ‘பொம்மை நாயகி’ போன்ற கதையின் நாயகனாகவும் பல பரிமாணங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்து வரும் நடிகர் யோகி பாபு, தற்போது மலையாளத் திரையுலகிலும் தனது கவனத்தைச் செலுத்தி வருகிறார்.
ஏற்கனவே பிலிருத் இயக்கத்தில் பிரித்விராஜ், பாசில் ஜோசப் நடிப்பில் வெளியாகிப் பெரும் வெற்றி பெற்ற ‘குருவாயூர் அம்பலநடையில்’ மலையாளத் திரைப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் தோன்றி மலையாள ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றிருந்தார். அதனைத் தொடர்ந்து, தற்போது புதியதாக உருவாகி வரும் ‘ஹரிவராசனம்’ திரைப்படத்தில் ஒரு மிக முக்கியமான கதாபாத்திரத்தில் யோகி பாபு நடிக்கவுள்ளார்.
இப்படத்தில் நாயகனாக நடிக்கும் மலையாள நடிகர் சைஜு குறுப், தனது சமூக வலைதளப் பக்கத்தில் யோகி பாபுவை வரவேற்றுப் பதிவிட்டுள்ளார். அதில், “எங்கள் ‘ஹரிவராசனம்’ படக்குழுவிற்குத் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான யோகி பாபுவை வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
தமிழில் பிஸியான நடிகராக வலம் வரும் யோகி பாபு, தற்போது பிறமொழித் திரைப்படங்களிலும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.













