டேட்டிங் செயலி மூலம் வாலிபரை வரவழைத்து பணம் பறிப்பு: 4 பேர் கைது

0
3

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியில் டேட்டிங் செயலி மூலம் பழகிய வாலிபரை வரவழைத்து தாக்கி பணம் பறித்த சம்பவத்தில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் வாண்டிராஜன் குப்பத்தைச் சேர்ந்த 22 வயதான தனியார் நிறுவன ஊழியர் கணேசன், சமூக வலைதள டேட்டிங் செயலி மூலம் சிலருடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்த பழக்கத்தை பயன்படுத்திக் கொண்ட திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த கன்னியப்பன் (23), மணிகண்டன் (24), பாஸ்கர் (22) மற்றும் பிரசாந்த் (22) ஆகியோர், கணேசனை கொத்திமங்கலம் பகுதிக்கு வருமாறு அழைத்துள்ளனர்.

நேற்று முன்தினம் நள்ளிரவு அங்கு சென்ற கணேசனை, அந்த நால்வரும் தாக்கியதுடன், அவரது மொபைல் போனில் இருந்த பணப்பரிமாற்ற செயலி மூலம் ரூ.11,500 பணத்தை பறித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கணேசன் அளித்த புகாரின் பேரில், திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சம்பவத்தில் தொடர்புடைய கன்னியப்பன், மணிகண்டன், பாஸ்கர் மற்றும் பிரசாந்த் ஆகியோரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.