திருச்சியில் உலர் துறைமுகம் அமைக்க மாநில அரசு நிலம் தேர்வு செய்து ஒப்புதல் அளித்தால் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகும் என மதிமுக எம்பி துரை வைகோ தெரிவித்துள்ளார்.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பன்னோக்கு சரக்குப் போக்குவரத்து முனையமான உலர் துறைமுகம் (Dry Port / Multi-Modal Logistics Park) அமைப்பதற்கான நிலத்தைத் தேர்வு செய்து தமிழ்நாடு அரசு உடனடியாக ஒப்புதல் அளித்தால், மத்திய மண்டலப் பகுதியில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
மத்திய மண்டலத்தின் தொழில் வளர்ச்சி மற்றும் ஏற்றுமதி வர்த்தகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வது தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுக முதன்மைச் செயலாளரும் திருச்சி தொகுதி எம்.பி.யுமான துரை வைகோ பேசுகையில், “திருச்சி சர்வதேச விமான நிலையம், சிறந்த ரயில் மற்றும் தேசிய நெடுஞ்சாலை இணைப்புகளைக் கொண்ட மிக முக்கிய மையமாக விளங்கி வருகிறது. இந்தச் சூழலில், மத்திய அரசு மூலம் திருச்சியில் உலர் துறைமுகம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் பிரகாசமாக உள்ளன. இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் உள்நாட்டு உற்பத்திப் பொருட்கள் விரைவாகக் கையாளப்படுவதோடு, ஏற்றுமதி வர்த்தகம் பல மடங்கு அதிகரிக்கும்” என்று குறிப்பிட்டார்.
மேலும் பேசிய அவர், “மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி இத்திட்டத்தை முன்னெடுக்கத் தேவையான நிலத்தை அடையாளம் கண்டு, அரசு நிலத்தை உடனடியாகத் தேர்வு செய்து அதற்கான நிர்வாக ஒப்புதலைத் தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும். நிலம் இறுதி செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டால், சரக்குப் போக்குவரத்து முனையம் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் தொடங்கும். இதன் மூலம் திருச்சி மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களைச் சேர்ந்த பட்டதாரி மற்றும் தொழில்நுட்ப இளைஞர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் தேடி வரும்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
மத்திய மண்டலத்தின் நீண்ட நாள் தொழில் வளர்ச்சி எதிர்பார்ப்பான இந்த உலர் துறைமுகத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த மாநில அரசு உடனடியாக முன்வர வேண்டும் என்ற துரை வைகோவின் இந்த கோரிக்கை, டெல்டா மற்றும் மத்திய மாவட்ட தொழில்முனைவோர் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.











