ராஜா கருப்பசாமி இயக்கத்தில் வெளியான ‘மொத ராத்திரி’ படத்தை ரசித்துப் பாராட்டியுள்ள நடிகர் சிம்பு, தமிழின் சிறிய படங்களுக்கும் ஆதரவு தர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கத்தில், புதுமுகங்கள் ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்று வரும் ‘மொத ராத்திரி’ திரைப்படத்தை நடிகர் சிலம்பரசன் TR நேரில் கண்டு ரசித்து, படக்குழுவினருக்குத் தனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதையம்சத்தோடு களமிறங்கும் சிறு பட்ஜெட் திரைப்படங்களுக்குப் பொதுமக்கள் மற்றும் திரைத்துறையினரின் ஆதரவு எப்போதும் முக்கியத் தேவையாக இருந்து வருகிறது. அந்த வகையில், கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியான ‘மொத ராத்திரி’ திரைப்படம், யதார்த்தமான கிராமத்து பின்னணி மற்றும் எதார்த்த நகைச்சுவை கலந்த திரைக்கதையால் விமர்சன ரீதியாகப் பெரும் கவனத்தை ஈர்த்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், இத்திரைப்படத்தைப் பார்த்த நடிகர் சிலம்பரசன் TR தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் படக்குழுவினரை வெகுவாகப் பாராட்டி நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “படம் பார்த்தேன், மிகவும் ரசித்தேன். பிற மொழிகளில் வெளியாகும் சிறிய பட்ஜெட் திரைப்படங்களை நாம் கொண்டாடுவது போன்று, தமிழிலும் அதேபோல் தரமாக வெளிவரும் படைப்புகளுக்கும் நமது அன்பையும் பேராதரவையும் தொடர்ந்து தர வேண்டும்” என்று ரசிகர்களுக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், “புதிய இயக்குநரும் அவரது குழுவினரும் இணைந்து மண்ணின் மணத்தோடு மிகவும் சுவாரஸ்யமானதொரு படைப்பைத் தந்துள்ளனர். ஒட்டுமொத்தப் படக்குழுவினருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள்; தொடர்ந்து இது போன்ற நல்ல படங்களை உருவாக்குங்கள்” என எஸ்டிஆர் வாழ்த்தியுள்ளார். முன்னணி நட்சத்திரமான சிலம்பரசனின் இந்த மனம் திறந்த பாராட்டு ‘மொத ராத்திரி’ படக்குழுவினருக்குப் பெரும் உத்வேகத்தை அளித்துள்ளதோடு, சமூக வலைதளங்களிலும் சினிமா வட்டாரத்திலும் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.











