மதுராந்தகம் அருகே மாற்று கட்சிகளில் இருந்து விலகி ஏராளமானோர் தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க.) இணையவுள்ள நிகழ்ச்சியை முன்னிட்டு வைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட பேனர்கள் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியும், அண்மையில் அக்கட்சியில் இணைந்தவருமான மரகதம் குமரவேல் சார்பில், சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட வரவேற்பு பேனர்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த பேனர்கள் வழியாக நடைபெறவுள்ள இணைப்பு விழாவிற்கான அழைப்பும், கட்சியின் வளர்ச்சியை வெளிப்படுத்தும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில், நேற்று சில இடங்களில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை கட்சியினர் பார்வையிட்டபோது, அதில் இடம்பெற்றிருந்த மரகதம் குமரவேலின் புகைப்படம் மட்டும் மர்ம நபர்களால் கிழிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. மற்ற பகுதிகள் சேதமடையாமல் இருந்த நிலையில், குறிப்பாக அவரது புகைப்படம் மட்டுமே கிழிக்கப்பட்டிருந்தது கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த த.வெ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அரசியல் உள்நோக்கத்துடன் இந்த செயல் நடந்ததா அல்லது வேறு காரணமா என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இச்சம்பவம் மதுராந்தகம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




