அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களின் கணினிகளில் இருந்து விண்டோஸ் ஓஎஸ்-ஐ நீக்கிவிட்டு லினக்ஸ் தளத்திற்கு மாற சீனா அதிரடி உத்தரவிட்டுள்ளது.
அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கணினிகளில் இருந்து அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் விண்டோஸ் (Windows) இயக்க முறைமையை முற்றிலுமாக நீக்கிவிட்டு, உள்நாட்டு லினக்ஸ் (Linux) சார்ந்த ஓஎஸ்-க்கு மாற வேண்டும் என்று சீன அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
அமெரிக்காவுடனான புவிசார் அரசியல் மற்றும் தொழில்நுட்ப மோதல்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் சூழலில், வெளிநாட்டு மென்பொருட்கள் மற்றும் தொழில்நுட்பங்களைச் சார்ந்திருப்பதை வெகுவாகக் குறைக்கும் நோக்கில் சீனா இந்தத் தீர்க்கமான முடிவை எடுத்துள்ளது. குறிப்பாக, நாட்டின் அதிமுக்கியத் தகவல்கள், ரகசிய ஆவணங்கள் மற்றும் பொதுத்துறை தரவுகளின் பாதுகாப்பை (Data Security) உறுதிப்படுத்தவும், சைபர் உளவு அச்சுறுத்தல்களில் இருந்து தற்காத்துக் கொள்ளவும் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் இந்த கெடுபிடியை விதித்துள்ளது.
இதன் மூலம், அனைத்து மத்திய மற்றும் மாகாண அரசு அலுவலகங்கள், அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் நிறுவனங்கள் தங்களது சிஸ்டங்களில் பயன்பாட்டில் உள்ள விண்டோஸ் ஓஎஸ்-ஐ உடனடியாக அன்-இன்ஸ்டால் செய்துவிட்டு, உள்நாட்டில் உருவாக்கப்பட்ட கிலின் (Kylin) மற்றும் யூனிட்டி (UOS) உள்ளிட்ட லினக்ஸ் அடிப்படையிலான இயக்க முறைமைகளுக்கு உடனடியாக மாற வேண்டும் எனப் பணித்துள்ளது. சீனாவின் இந்த அதிரடி நடவடிக்கை மைக்ரோசாப்ட் உள்ளிட்ட அமெரிக்க பெருநிறுவனங்களுக்கு சர்வதேச அளவில் மிகப்பெரிய வணிகப் பின்னடைவாகக் கருதப்படுகிறது. அதேவேளையில், தனது ‘டிஜிட்டல் இறையாண்மை’ மற்றும் மென்பொருள் தற்சார்பை சர்வதேச அரங்கில் நிலைநாட்ட சீனா எடுத்துள்ள இந்த மெகா நகர்வு உலகளாவிய தகவல் தொழில்நுட்ப சந்தையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.












