கேளம்பாக்கம் சுஷில் ஹரி பள்ளி தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபா மீதான போக்ஸோ வழக்குகளின் விசாரணை தாமதமாக நடைபெற்று வருவதாக, பாஜக மாநில துணைத் தலைவர் மற்றும் தலைமை செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கருத்தில், பீகார் மாநிலத்தில் 33 ஆண்டுகள் பழமையான ஒரு வழக்கில் 84 வயது முதியவருக்கு சமீபத்தில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டியுள்ளார். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதையும், நீதி தாமதமாக கிடைத்தாலும் வழங்கப்பட வேண்டும் என்பதையும் அந்த தீர்ப்பு எடுத்துக்காட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதே நேரத்தில், செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் செயல்பட்ட சுஷில் ஹரி பள்ளியுடன் தொடர்புடைய சிவசங்கர் பாபா மீது 2021ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட போக்ஸோ வழக்குகள் இன்னும் முழுமையாக முடிவுக்கு வராதது வருத்தமளிப்பதாக நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான போக்ஸோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் விரைவாக விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட வேண்டிய நிலையில், பல ஆண்டுகளாக விசாரணை நீடித்து வருவது துரதிர்ஷ்டவசமானது என அவர் கூறியுள்ளார்.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாக நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக நீதிமன்ற நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சிவசங்கர் பாபா தொடர்பான வழக்கு தமிழகம் முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்திருந்த நிலையில், விசாரணை தாமதம் குறித்து அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் தொடர்ந்து கேள்விகள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், நாராயணன் திருப்பதியின் இந்த கருத்து மீண்டும் இந்த வழக்கை பேசுபொருளாக மாற்றியுள்ளது.





