வங்கதேசத்தில் ஏற்பட்ட மக்கள் புரட்சியைத் தொடர்ந்து தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, கடந்த 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி இந்தியாவில் தஞ்சமடைந்த அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாகத் தனது நீண்டகால மௌனத்தைக் கலைத்துப் பொதுவெளியில் உரை நிகழ்த்தவுள்ளார்.
வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி புதுடெல்லியில் உள்ள சர் மார்க் டுல்லி அரங்கில் தெற்காசிய வெளியுறவுச் செய்தியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் சிறப்பு மாநாட்டில், ஆன்லைன் நேரலை வழியாகச் ஷேக் ஹசீனா பங்கேற்று உரை ஆற்றவுள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியாவில் மிகுந்தப் பாதுகாப்பு கட்டுப்பாடுகளுடன் வசித்து வந்த அவர், சர்வதேச ஊடகவியலாளர்கள் மற்றும் வெளியுறவுத்துறை நிபுணர்கள் முன்னிலையில் உரையாற்ற இருப்பது ராஜதந்திர வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த உரையினூடே, தான் ஆட்சியில் இருந்து வீழ்த்தப்பட்டதன் பின்னணியில் இருந்த அரசியல் சதித்திட்டங்கள், தற்போதைய இடைக்கால அரசின் நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத்தில் மீண்டும் வங்கதேசம் திரும்புவது தொடர்பானத் தனது அடுத்தகட்டக் காய்நகர்த்தல்கள் குறித்து அவர் மிக விரிவாகப் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2 ஆண்டுகள் நிறைவடையும் நாளில் ஷேக் ஹசீனா மேற்கொள்ளும் இந்த அதிரடி ரீ-என்ட்ரி, வங்கதேச அரசியல் களத்திலும் தெற்காசிய புவிசார் அரசியலிலும் (Geopolitics) புதிய மாற்றங்களையும் காரசாரமான விவாதங்களையும் உருவாக்கும் எனத் தெரிகிறது.













