“காந்தாரா” திரைப்பட சர்ச்சை பேச்சு: மைசூரு சாமுண்டீஸ்வரி கோவிலில் மன்னிப்பு கேட்ட நடிகர் ரன்வீர் சிங்!

0
7

“கன்னட மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் ‘காந்தாரா’ திரைப்படம் குறித்து விமர்சித்துப் பேசிய விவகாரத்தில், பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அளித்த வாக்குறுதியின்படி, மைசூரு சாமுண்டி மலையில் சாமுண்டீஸ்வரி அம்மனை நேரில் தரிசித்துத் தனது மன்னிப்பைக் கோரியுள்ளார்”.

கன்னட இயக்குநரும் நடிகருமான ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்து, பெரும் வரவேற்பைப் பெற்று வசூலைக் குவித்த ‘காந்தாரா’ திரைப்படத்தில் வரும் தெய்வ கதாபாத்திரம் குறித்து, கடந்தாண்டு கோவாவில் நடந்த சர்வதேசத் திரைப்பட நிறைவு விழாவில் ரன்வீர் சிங் பேசியிருந்தார். அப்போது அவர் அந்தத் தெய்வ கதாபாத்திரத்தை விமர்சிக்கும் வகையில் முகபாவனை காட்டியது கன்னடர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இவ்விவகாரம் தொடர்பாகப் பெங்களூரு ஹைகிரவுண்ட் காவல் நிலையத்தில் ரன்வீர் சிங் மீது புகார் அளிக்கப்பட்டு, வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் சமூக வலைத்தளங்களில் பகிரங்கமாக மன்னிப்பு கோரிப் பதிவிட்ட போதிலும், இந்த வழக்கு விசாரணை நீதிமன்றம் வரை சென்றது. பல தரப்பட்ட விசாரணைக்குப் பின், மைசூரு சாமுண்டி மலையிலுள்ள கோவிலுக்கு நேரில் சென்று சாமுண்டீஸ்வரி அம்மனிடம் மன்னிப்பு கேட்பதாக நடிகர் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றமும், ஒரு மாத காலத்திற்குள் சாமுண்டீஸ்வரி அம்மனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவை நிறைவேற்றும் பொருட்டு, நேற்று காலை 7:30 மணியளவில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மைசூரு சாமுண்டி மலைக்கு முகக்கவசம் அணிந்தபடி வந்து கோவிலுக்குள் சென்றார். இதுகுறித்துச் சாமுண்டீஸ்வரி ஷேத்திர மேம்பாட்டு ஆணைய செயலர் ரூபா விடுத்துள்ள விபரங்கள் பின்வருமாறு:

எளிய பக்தராகத் தரிசனம்: எந்தவித சிறப்பு ஏற்பாடுகளும் இன்றி, ஒரு சாதாரண பக்தரைப் போல ரன்வீர் சிங் நேற்று காலை கோவிலுக்கு வந்திருந்தார். அவருக்குக் கோவில் ஊழியர்கள் மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.

விநாயகர் முதல் சாமுண்டீஸ்வரி வரை: கோவிலுக்குள் சென்ற அவர் முதலில் அங்கிருந்த விநாயகப் பெருமானை மனமுருகப் பிரார்த்தித்தார்; அதனைத் தொடர்ந்து மூலவரான சாமுண்டீஸ்வரி தேவியை நேரில் தரிசித்தார். சந்நிதானத்தில் சுமார் 10 நிமிடங்கள் வரை அமர்ந்து அமைதியான முறையில் இறைவழிபாடு செய்து, தனது பிரார்த்தனையை மேற்கொண்டார்.

அவர் தரிசனத்தை முடித்துவிட்டு அங்கிருந்து கிளம்பிய பின், அது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவிய பிறகே, இந்த ரகசிய வருகை குறித்த விபரம் பொதுமக்களுக்குத் தெரியவந்தது.

ranveer-singh-apologizes-at-mysuru-chamundeshwari-temple-for-kantara-remarks