கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்க முயன்ற 3 பேர் கைது; 2 கிலோ கஞ்சா பறிமுதல்

0
2

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே உள்ள பொத்தேரி பகுதியில், கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ய முயன்றதாக மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

பொத்தேரி விஷ்ணுபிரியா நகர் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த சிலரை போலீசார் கண்காணித்து சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர்களிடம் இருந்து சுமார் 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து, அரும்பாக்கத்தைச் சேர்ந்த முருகன் (28), அண்ணாநகரைச் சேர்ந்த கார்த்திக் (35) மற்றும் நந்திவரத்தைச் சேர்ந்த குணசேகரன் (19) ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை கைப்பற்றிய போலீசார், அதன் மூலாதாரம் மற்றும் விற்பனை வலையமைப்பு குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதைப்பொருள் விற்பனை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.