எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் நெகிழ்ச்சி: மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய கிரிக்கெட் போட்டி நிறைவு!

0
3

செங்கல்பட்டு காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய கிரிக்கெட் போட்டியின் நிறைவு விழாவில், தமிழக மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் சரத்குமார் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் (SRM) பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில், தமிழ்நாடு சக்கர நாற்காலி சங்கம் மற்றும் எஸ்.ஆர்.எம் கல்விக் குழுமம் இணைந்து நடத்திய மாற்றுத்திறனாளிகளுக்கான மாபெரும் தேசியக் கிரிக்கெட் போட்டியின் நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு விழா இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.

கடந்த நான்கு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்தத் தேசிய அளவிலான கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி மற்றும் நிறைவு விழாவிற்குத் தமிழக மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆர். சரத்குமார் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக நேரில் கலந்து கொண்டார். விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற இறுதிப் போட்டிக்கு அமைச்சர் சரத்குமார் டாஸ் போட்டு, தானே களமிறங்கி பேட்டிங் செய்து போட்டியினை உத்தியோகபூர்வமாகத் துவக்கி வைத்தார். இந்த மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு உள்கட்டமைப்பை ஊக்குவிக்கும் நோக்கில், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்டி தியாகராஜன் அவர்களும் அமைச்சருடன் இணைந்து டாஸ் போட்டு விளையாடி வீரர்களை உற்சாகப்படுத்தினார்.

இந்த உன்னதமான நிறைவு விழாவிற்கு எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் விளையாட்டுத்துறை இயக்குநர் மோகனகிருஷ்ணன் மற்றும் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக வளாக அதிகாரி அருணாச்சலம் ஆகியோர் முன்னிலை வகித்துச் சிறப்புரையாற்றினர். அதனைத் தொடர்ந்து, கடந்த மூன்று தினங்களாகத் தங்களது அசாத்தியத் திறமைகளை வெளிப்படுத்தி விளையாடிய மாற்றுத்திறனாளி வீரர்களுக்குச் சிறந்த பேட்டிங், சிறந்த பந்துவீச்சு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் பரிசுகளும், வெற்றிக் கேடயங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இறுதியாகச் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் தியாகராஜன் அவர்களின் நன்றியுரையுடன் இந்தத் தேசியக் கிரிக்கெட் திருவிழா இனிதே நிறைவுற்றது.