செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே, இருசக்கர வாகனம் மீது மோதாமல் இருக்கத் திருப்பப்பட்ட அரசுப் பேருந்து சாலையோரத் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 30-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு திருவண்ணாமலை நோக்கி அரசுப் பேருந்து ஒன்று புறப்பட்டது. அந்தப் பேருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வந்து சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது, பேருந்துக்கு பின்னால் வந்த இருசக்கர வாகனம் ஒன்று முந்திச் செல்ல முயன்றதாகத் தெரிகிறது. அந்த இருசக்கர வாகனம் மீது மோதாமல் இருப்பதற்காக அரசுப் பேருந்தின் ஓட்டுநர் பேருந்தை இடது பக்கமாகத் திருப்பியுள்ளார்.
அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, திடீரென சாலையோரத்தில் இருந்த இரும்புத் தடுப்புக் கம்பிகளின் மீது பலமாக மோதி விபத்துக்குள்ளானது. விபத்து நடந்தவுடன் பேருந்துக்குள் இருந்த பயணிகள் அலறியடித்தனர். எனினும், இந்த விபத்தில் அரசுப் பேருந்தில் பயணம் செய்த 30-க்கும் மேற்பட்ட பயணிகள் நல்வாய்ப்பாக எந்தவிதக் காயங்களும் இன்றி உயிர் பிழைத்தனர். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே நடந்த இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது.













