முன்பு போல் வேலை செய்ய முடியவில்லை, இளம் தலைமுறையிடம் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டும் என்ற மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் பேச்சு பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
கடந்த 30 ஆண்டுகளாகத் தீவிர பொதுவாழ்வில் பணியாற்றிவிட்ட நிலையில், தற்போது தன்னால் முன்பைப் போல கடினமாக உழைக்க முடியவில்லை என்றும், பணிகளையும் பொறுப்புகளையும் இளம் தலைமுறையிடம் ஒப்படைக்க வேண்டிய தருணம் இதுவென்றும் பாஜக மூத்த தலைவரும் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சருமான நிதின் கட்கரி பேசியிருப்பது தேசிய அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற கல்வி அறக்கட்டளை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய நிதின் கட்கரி, தனது நீண்ட காலப் பொதுவாழ்க்கைப் பயணத்தைத் திரும்பிப் பார்த்து உருக்கமாகப் பேசினார். அப்போது பேசிய அவர், “கடந்த 30 ஆண்டுகளாக நான் தொடர்ச்சியாகப் பொதுவாழ்வில் செயலாற்றி வருகிறேன். பல ஏற்ற இறக்கங்களைக் கண்டுள்ளேன். ஆனால், இந்த நாட்களில் என்னால் முன்னரைப் போல தீவிரமாகப் பணியாற்ற இயலவில்லை. ஆகவே, பணிகளை அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்க வேண்டும்.
புதிய தலைமுறை முன்னின்று வழிநடத்த, மூத்தவர்கள் அவர்களுக்குத் தேவையான வழிகாட்டுதலை வழங்க வேண்டும்” என்று தெரிவித்தார். அவரது இந்தப் பேச்சு வெளியானதைத் தொடர்ந்து, அவர் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறத் திட்டமிடுகிறாரா அல்லது மத்திய அமைச்சரவையில் மாற்றங்கள் வரவுள்ளதா என்ற விவாதங்கள் போன்ற முன்னணி ஊடகங்களில் வேகமாகப் பரவின. இதனிடையே, நாளிதழ் வெளியிட்டுள்ள தகவலின்படி, அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ விளக்கத்தில், “அமைச்சரின் பேச்சு முற்றிலும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது;
கிராமப்புறப் பள்ளிகளை நிர்வகிக்கும் அறக்கட்டளையின் செயல்பாடுகள் மற்றும் அதன் எதிர்கால தலைமைத்துவம் குறித்தே அவர் பேசினாரே தவிர, இதில் எவ்வித அரசியல் உள்நோக்கமோ அல்லது அரசியல் ஓய்வு குறித்த அறிவிப்போ துளியும் இல்லை” என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டு இந்த சலசலப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.













