தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2026–2027-ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித் துறைக்கு நிதி குறைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்வைத்த குற்றச்சாட்டிற்கு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் புள்ளிவிவரங்களுடன் பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2025-26 திமுக ஆட்சிக் காலத்தில் பள்ளிக்கல்வித் துறைக்காக ரூ.46,767 கோடி நிதி ஒதுக்கப்பட்டதாகக் கணக்குக் காட்டப்பட்டாலும், இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் வரை அதில் ரூ.42,351 கோடி மட்டுமே உண்மையில் செலவழிக்கப்பட்டது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏட்டுச் சுரைக்காய் போலக் காகிதத்தில் மட்டும் அதிகத் தொகையை ஒதுக்கிவிட்டு, நிஜத்தில் குறைந்த அளவே செலவு செய்யும் வழக்கத்தைக் கடந்து, தற்போது தவெக அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள ரூ.44,527 கோடியும் மாணவர்களின் நலனுக்காக முழுமையாகப் பயன்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
காகித அறிவிப்புகளை விட நடைமுறைச் செயல்பாடே முக்கியம் எனக் குறிப்பிட்ட அவர், உண்மையான நிதியுயர்வை வழங்கியது தவெக அரசு தான் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும் என உதயநிதிக்குக் காட்டமாகப் பதிலளித்துள்ளார்.













