தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்துச் சென்னை திருவொற்றியூரில் காங்கிரஸ் கட்சியினர் பிரதமர் மோடியின் உருவம் பொறித்த பேனரைக் கிழித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒன்றிய பாஜக அரசு மீண்டும் கொண்டு வரவுள்ள மக்களவைத் தொகுதி மறுவரையறை நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை திருவொற்றியூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மாவட்ட தலைவர் மாதரம்மா கனி தலைமையில் நடைபெற்ற இந்த அமைதி ஊர்வலத்தில், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்லக்குமார் கலந்துகொண்டார். திருவொற்றியூர் தேரடி சன்னதி தெருவில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலத்தில், நிர்வாகிகள் பிரதமர் மோடியின் உருவம் பொறித்த கருப்பு பலூன்களை ஏந்தியபடி சென்றனர். தொடர்ந்து காந்தி சிலை முன்பு கூடிய அவர்கள், பிரதமர் மோடியின் உருவம் பொறித்த பேனரைக் கிழித்தும், கருப்பு பலூன்களை உடைத்தும் தங்களது பலத்த எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் எம்.எஸ். திரவியம், அன்புமணி ராமதாஸ் காங்கிரஸ் வரலாற்றைப் புரிந்து கொண்டு பேச வேண்டும் என்றும், காங்கிரஸ் தலைவர்களைப் பற்றித் தரக்குறைவாகப் பேசினால் அவரை தமிழகத்தில் நடமாட விடமாட்டோம் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த செல்லக்குமார், தொகுதி மறுவரையறைக்கு எதிரான அனைத்துக் கட்சி கூட்டத்தைப் புறக்கணித்தவர்கள் மீது விமர்சனம் வைத்தார். தமிழ் உணர்வும் மக்கள் மீது அக்கறையும் கொண்ட அனைவரும் இந்தத் தொகுதி மறுவரையறை நடவடிக்கையைத் தீவிரமாக எதிர்ப்பார்கள் என்று அவர் தெரிவித்தார்.













