5 தென்னிந்திய மாநிலங்களை உள்ளடக்கிய தென்மண்டல கவுன்சிலின் துணைத் தலைவராகத் தமிழக முதலமைச்சர் விஜய் நியமிக்கப்பட்டுள்ளார்.
தென்னிந்தியாவின் 5 முக்கிய மாநிலங்களை உள்ளடக்கிய தென்மண்டலக் குழுவின் (Southern Zonal Council) புதிய துணைத் தலைவராகத் தமிழக முதலமைச்சர் விஜய் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்தக் குழுவின் செயலாளராகத் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சாய்குமார் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
மாநிலங்களுக்கு இடையேயான நல்லுறவை வலுப்படுத்தவும், நதிநீர் பங்கீடு, எல்லைப் பிரச்சனைகள், சட்டம்-ஒழுங்கு, மின் பகிர்வு உள்ளிட்ட பொதுவான உள்கட்டமைப்பு மற்றும் நிர்வாக விவகாரங்களை சுமுகமாகத் தீர்த்து வைக்கவும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் மண்டலக் கவுன்சில்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா மற்றும் தெலங்கானா ஆகிய 5 தென்னிந்திய மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகியவை தென்மண்டல கவுன்சிலின் கீழ் வருகின்றன.
மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் இயங்கும் இந்த உயர்மட்ட அமைப்பின் துணைத் தலைவர் பதவி, சுழற்சி முறையில் குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு மாநில முதலமைச்சருக்கு வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், தற்போது தென்மண்டல கவுன்சிலின் புதிய துணைத் தலைவராகத் தமிழக முதலமைச்சர் விஜய் முறைப்படி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல், இக்குழுவின் புதிய செயலாளராகத் தமிழக தலைமைச் செயலாளர் சாய்குமார் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தென்மண்டல கவுன்சிலின் துணைத் தலைவராகத் தமிழக முதல்வர் பொறுப்பேற்றுள்ளதன் மூலம், அண்டை மாநிலங்களுடனான முக்கிய நதிநீர் விவகாரங்கள், தொழில் வளர்ச்சி மற்றும் எல்லைப் பாதுகாப்பு சார்ந்த தமிழகத்தின் முக்கிய நலன்களுக்குக் கூடுதல் முன்னுரிமை பெற்றுத் தர முடியும் என அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.













