திருவள்ளூர் மாவட்டம் கும்முடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் இன்று நேரிட்ட பயங்கர கொதிகலன் வெடிப்பு விபத்தில் சிக்கி உயிரிழந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளியின் குடும்பத்திற்குத் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் தங்களது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டுள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உடனடியாக இரண்டு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் அவர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
கும்முடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில் பழைய பேட்டரியில் காரீயம் பிரித்து எடுக்கும் தனியார் தொழிற்சாலையில், வழக்கம்போல் தொழிலாளர்கள் தங்களது பணிகளில் ஈடுபட்டிருந்த போது அனல் கக்கும் கொதிகலன் திடீரெனப் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே பீகார் மாநிலத்தைச் சேர்ந்த வடமாநிலத் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், விபத்தில் படுகாயமடைந்த தொழிலாளர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் கும்முடிப்பூண்டி அரசு பொது மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தை அறிந்த உடனே மாவட்ட நிர்வாகத்தை முடுக்கிவிட்ட முதலமைச்சர் விஜய், மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்த உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களுக்கு அதிநவீன மற்றும் தரமான மருத்துவச் சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்ய சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ள முதலமைச்சர், காயமடைந்தவர்களின் குடும்ப நலனைக் கருத்தில் கொண்டு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மூன்று நபர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும், இலேசான காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் ஆறு நபர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், உயிரிழந்த நபரின் உடலினை அரசு செலவில் சொந்த மாநிலத்திற்கு அனுப்பிவைக்க நடவடிக்கை மேற்கொள்ளவும் முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.













