செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுபாக்கம் பகுதியில் வனத்துறை சார்பில் வளர்க்கப்பட்டுள்ள 30,000 மரக்கன்றுகள் விரைவில் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளன.
பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தை குறைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில், மத்திய மற்றும் மாநில அரசுகள் மரக்கன்றுகள் நடவு பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு உயிர் பன்முகத்தன்மை மற்றும் பசுமையாக்கும் திட்டத்தின் கீழ் பல்வேறு பகுதிகளில் மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.
கடந்த ஆண்டு அச்சிறுபாக்கம் வனத்துறை நர்சரியில் பதியம் செய்யப்பட்ட மரக்கன்றுகள் தற்போது நன்கு வளர்ந்துள்ளன. சந்தனம், தேக்கு, மகாகனி, சவுக்கு உள்ளிட்ட பல்வேறு வகைகளைச் சேர்ந்த சுமார் 30,000 மரக்கன்றுகள் விவசாயிகள் பயன்பெறும் வகையில் தயாராக உள்ளன.
வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், இந்த மரக்கன்றுகள் அச்சிறுபாக்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளதாகவும், அதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர்.
மேலும், ஊராட்சிகள், தனியார் தொழிற்சாலைகள் மற்றும் அரசு இடங்களில் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து வனத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறினர்.








