பனையூர் பாபு விசிகவில் இருந்து விலகினார்

0
7

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் (விசிக) ஊடகப்பிரிவு முதன்மை செயலாளரும், முன்னாள் செய்யூர் சட்டமன்ற உறுப்பினருமான பனையூர் பாபு, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகியுள்ளதாக அறிவித்துள்ளார்.

தவெக அமைச்சரவையில் விசிக பங்கேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள தனது அறிக்கையில், “அடிக்கடி அரசியல் நிலைப்பாடுகளை மாற்றிக் கொண்டிருக்கும் தலைமையின் கீழ் தொடர்ந்து பயணிக்க முடியாது” என்று விசிக தலைவர் திருமாவளவன் மீது மறைமுகமாக குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.

மேலும், கட்சியின் தற்போதைய அரசியல் அணுகுமுறைகளில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும், கொள்கை ரீதியான முரண்பாடுகளால் தான் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் பனையூர் பாபு தெரிவித்துள்ளார்.

செய்யூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏவாக செயல்பட்ட பனையூர் பாபு, விசிகவில் முக்கிய நிர்வாகியாகவும், ஊடகப்பிரிவு முதன்மை செயலாளராகவும் இருந்து வந்தார். அவரது விலகல், கட்சியின் உள்நிலை அரசியலில் புதிய விவாதங்களை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில், பனையூர் பாபுவின் விலகல் குறித்து விசிக தலைமையிலிருந்து இதுவரை அதிகாரப்பூர்வ பதில் வெளியாகவில்லை.