சிங்கபெருமாள் கோவில் அருகே உள்ள ஆப்பூர் காப்புக்காடு பகுதியில் சட்டவிரோதமாக கோழி சண்டை நடத்தி சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
தகவலின்படி, நேற்று காலை ஆப்பூர் வனப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்று கூடி கோழி சண்டை நடத்தி பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பாலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சிங்கபெருமாள் கோவில் – ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலை அருகே உள்ள ஆப்பூர் வனப்பகுதியில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
போலீசார் வருவதை அறிந்த கோழி சண்டை கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. இதையடுத்து சம்பவ இடத்தில் கைவிடப்பட்டிருந்த 15 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக 14 பேரை அடையாளம் கண்டு அவர்கள்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தலைமறைவாக உள்ளவர்களை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத கோழி சண்டை மற்றும் சூதாட்ட நடவடிக்கைகளை கட்டுப்படுத்த தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.





