முதன்முறையாக புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியப் பயணிகளுக்கு வழங்கப்படும் நிதி மானியத் தொகையை ரூ.25,000-லிருந்து ரூ.35,000-ஆக உயர்த்தி தமிழ்நாடு பட்ஜெட்டில் நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2026–2027-ஆம் நிதியாண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்து உரையாற்றிய நிதியமைச்சர், “முதலமைச்சர் தலைமையில் இயங்கும் இந்த அரசு சிறுபான்மையின மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதிலும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதிலும் எப்போதும் உறுதியோடு செயல்படும்” எனக் குறிப்பிட்டார்.
இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு மாநில ஹஜ் கமிட்டி மூலம் புனிதப் பயணம் மேற்கொள்பவர்களில், முதன்முறை ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கான மானியத்தை மேலும் ரூ.10,000 உயர்த்தி வழங்கிட அரசு முடிவு செய்துள்ளது.
மேலும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறைக்கு ஒட்டுமொத்தமாக ரூ.1,700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இஸ்லாமிய மயானங்களின் (கபர்ஸ்தான்) அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.34 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.













