Advertisement

அஜய் பவனுக்கு சென்ற தமிழக முதலமைச்சர்: தவெக கூட்டணிக்கு ஆதரவளித்த இடதுசாரித் தலைவர்களுடன் டெல்லியில் ஆலோசனை!

டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர்களைத் தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) தேசியப் பொதுச் செயலாளர் டி.ராஜா அவர்களைத் தமிழக முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான சி. ஜோசப் விஜய் நேரில் சந்தித்துப் பேசினார்.

டெல்லிக்கு மூன்று நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் ஜோசப் விஜய், அங்குள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியத் தலைமை அலுவலகமான ‘அஜய் பவன்’ வளாகத்திற்கு நேற்று மாலை நேரில் சென்றார். அப்போது, அலுவலகத்தின் நுழைவாயிலிலேயே காத்திருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா, தேசியச் செயற்குழு உறுப்பினர் ராமகிருஷ்ண பாண்டா மற்றும் மூத்த இடதுசாரித் தலைவர்கள் மலர்க்கொத்து கொடுத்துத் தமிழக முதலமைச்சரை வரவேற்றுத் தங்களது கலந்துரையாடல் அறைக்கு அழைத்துச் சென்றனர்.

Advertisement

அண்மையில் தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலில், எந்தவொரு தனிப்பட்ட கட்சிக்கும் முழுமையான ஆட்சி அமைக்கத் தேவையான தனிப் பெரும்பான்மை கிடைக்காத அரசியல் சூழல் நிலவியது. அந்த காலகட்டத்தில், தலா 4 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள இடதுசாரிக் கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPIM) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) ஆகிய இரு கட்சிகளும் தமிழக வெற்றிக் கழகத்திற்குத் தங்களது ஆதரவை வழங்க முன்வந்தன. இந்த ஆதரவின் மூலம் மாநிலத்தில் புதிய கூட்டணி ஆட்சி அமைய வழிவகுத்தது.

இந்த அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு டெல்லி வந்துள்ள முதலமைச்சர் விஜய், தங்களது கூட்டணிக் கட்சித் தலைவர்களைத் தனித்தனியாக நேரில் சந்தித்து வருகிறார். நேற்றைய சந்திப்பின் போது, தமிழகத்தின் தற்போதைய சமூக, பொருளாதாரத் திட்டப் பணிகள் குறித்தும், மத்திய-மாநில அரசுகளின் உறவுகள் மற்றும் நிதிப் பகிர்வுகள் குறித்தும் இரு தலைவர்களும் சுமுகமான முறையில் விவாதித்தனர். டெல்லியில் காங்கிரஸ் தலைவர்களைத் தொடர்ந்து, கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரையும் முதலமைச்சர் விஜய் நேரில் சந்தித்திருப்பது தேசிய மற்றும் மாநில அரசியல் வட்டாரங்களில் முக்கியப் பேசுபொருளாக மாறியுள்ளது.

Advertisement

 

 

 

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement