செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் அருகே சவுடுமண் ஏற்றி சென்ற டிப்பர் லாரி திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
மதுராந்தகம் அடுத்த எல்.எண்டத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சுதாகர் (36) என்பவர் டிப்பர் லாரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். நேற்று மதியம் சுமார் 2.30 மணியளவில் சித்தாமூர் பகுதியில் இருந்து சவுடுமண் ஏற்றிக்கொண்டு, பவுஞ்சூர் வழியாக பூதூர் நோக்கி லாரியை இயக்கிச் சென்றார்.
ஜமீன் எண்டத்தூர் பகுதியில் லாரி சென்று கொண்டிருந்தபோது, அதன் முன்பகுதியில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறத் தொடங்கியது. இதைக் கவனித்த ஓட்டுநர் சுதாகர் உடனடியாக லாரியை சாலையோரத்தில் நிறுத்தி விட்டு கீழே இறங்கினார்.
சில நிமிடங்களிலேயே மின்கசிவு காரணமாக லாரியின் முன்பகுதியில் தீப்பற்றி எரியத் தொடங்கியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மதுராந்தகம் தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர்.
இருப்பினும், தீ விபத்தில் லாரியின் முன்பகுதி முழுமையாக எரிந்து கடுமையாக சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் சுதாகர் உயிர்தப்பியதால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து சித்தாமூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். லாரியில் ஏற்பட்ட மின்கசிவே தீ விபத்திற்கான காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.





